×

மெட்ரோ ரயில் திட்டம் கட்டிடம் 2 வழித்தடம் 4-ல் UG02-க்கான 2வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் UG02-க்கான இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவு பெற்றது. விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் நிலையான பொதுப் போக்குவரத்து அமைப்பு தேவையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ. நீளத்தில் 119 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* வழித்தடம் 3: மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை (45.4 கி.மீ),
* வழித்தடம் 4: கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி.மீ),
* வழித்தடம் 5: மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ)

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு (UG-01 & UG-02) ஒவ்வொன்றிலும் தோராயமாக 4 கி.மீ. நீளத்திற்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. மேல் மற்றும் கீழ் சுரங்கங்கள் இரண்டையும் கருத்தில் கொண்டு தோராயமாக 16 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தவுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் பயன்படுத்தப்படும் இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், பல்வேறு வகையான சுரங்கப்பாதைகளுக்கான சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை தயாரிப்பதில் முன்னோடியான ஹெரென்க்னெக்ட் என்ற புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் UG-02 தொகுப்புக்கான இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனையானது சென்னை, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள HK தொழிற்சாலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர்கள், AEON கன்சோர்டியத்தின் பல்வேறு அலுவலர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக முடிந்தது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் பெயர் S1075B, இது 6.670 மீ துளை விட்டம் மற்றும் 110 மீ நீளமுள்ள பூமி அழுத்த சமநிலை இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தின் மொத்த எடை தோராயமாக 700 மெட்ரிக் டன்கள் ஆகும். இது இப்போது பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு, தி.நகர், பனகல் பார்க் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் தி.நகர், பனகல் பார்க் நிலையத்தில் நடைபெற்று வருகிறது, மேலும் 2023 அக்டோபர் மாதத்தில் இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் செலுத்துவதற்கு தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வழித்தடம்-4-ல் பூமிக்கு அடியில் 26 மீ ஆழத்தில் கீழ்நிலையில் தொடங்கப்பட்டு, போட்கிளப், நந்தனம், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் வழியாக சுரங்கம் செய்யப்பட்டு இறுதியாக செப்டம்பர் 2024-இல் கோடம்பாக்கம் மேம்பாலத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் திட்டம் கட்டிடம் 2 வழித்தடம் 4-ல் UG02-க்கான 2வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : UG02 ,Metro ,Chennai ,Metro Rail ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...